கோயாபல்'சோ'வும் காந்துகளும்

துக்ளக்கில் பலமுறை படித்திருந்ததினால் வி.காந்தின் , முதல்வர் கருணாநிதி மேலான 'பாவாடை நாடா' குற்றச்சாட்டின் மேல் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இது தெரிந்ததுதானே என்றுதான் தோன்றியது. ஆனால் அதற்கு பிந்தைய வக்கீல் நோட்டிஸ்களும், வி.காந்த் தரப்பிலிருந்து வந்த மலுப்பல்களை பார்த்தபிறகு , கருணாநிதி மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை கோயபல்'சோ' செய்து வந்திருக்கிறார் என புரிந்தது .துக்ளக் படித்துவிட்டு உளறிய வி.காந்த் பாவம் ..


அடுத்து கருணாநிதி ஜோஸ்யம் பார்ப்பார் என யாரோ மேடையில் சொன்னதாகவும் அதற்கு கருணாநிதி மறுப்பு சொல்லவில்லை எனவும் துக்ளக்கில் , அடுத்தடுத்த வாரங்களில் வந்த செய்தி / கிண்டல் . தலைவர் ஜோஸ்யம் பார்ப்பார் என கூறியது விழாத்தலைவர் பற்றி எனவும் , அதை அதே மேடையில் அந்த தலைவர் மறுத்துள்ளார் எனவும் ஒரு செய்தி . தலைவர் என குறித்தது கருணாநிதியைத்தான் என நினைப்பது இயல்பு ஆனாலும் அதே மேடையில் அதற்கான விளக்கத்தை அறிந்த பின்பும் அதை செய்தியாக்குவது என்ன வகை நியாயம் ?

ர.காந்த் முதல்வரானால் தமிழ்நாடு குஜராத் ஆகுமாம் . தமிழ்நாட்டின் மேல் என்ன வெறுப்போ இவருக்கு ? பாஜகா, ர.காவின் ஆன்மீக முகமூடியுடன் தமிழ்நாட்டில் நுழைய எத்தளிப்பது புரிகிறது . ;) மோடிதான் சிறந்த நிர்வாகியாம் .குஜராத் கொலைகளுக்கு மோடி குற்றவாளி இல்லை என கொண்டாலும் ,பலநூறு கொலைகளை தடுக்கமுடியாதவர் எவ்வாறு நல்ல நிர்வாகியாக முடியும் ?

கீழே உள்ளதை படித்துவிட்டு வாய்வழியாகவாவது சிரித்து ...விடுங்கள்

16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..

கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .

அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?

,

தேவதாசிமுறை பற்றி தினமலரில் ..

சாதரணமாக திராவிட வலைப்பதிவுகளில் படிக்கக்கூடிய செய்தி தினமலரில் இருப்பது ஆச்சரியம்தான் .

வாரமலர் பா.கே.ப கீழே ..
... தமிழ்நாட்டில் பதினோரு ஜாதியினர் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களை பொட்டு கட்டி தாசிகளாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

... கைக்கோளர் சிறுமிகள் கோவிலுக்கு முறைப்படி தாசிகளாக நேர்ந்து விடப்படுவர்! அவ்வாறு நேர்ந்தளிக்கப்படும் சிறுமிக்குப் பாடவும், ஆடவும் கற்றுத் தரப்படுகிறது. நாட்டியம் கற்றுத் தரும் நட்டுவனார், கைக்கோளர் ஜாதியைச் சேர்ந்தவராகவும், பாட்டு கற்றுத் தருபவர், பிராமணர் ஜாதியைச் சேர்ந்த பாகவதராகவும் இருப்பர். நேர்ந்து விடப்படும் சிறுமி பூப்படைந்த பின் நடைபெறும் தாலி கட்டும் சடங்கின் போது, அவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்கும்படி செய்வர். அவளுக்கு முன்பக்கம் அதே போல நெற்குவியலின் மீது நிற்கும் இரண்டு தாசிகள், மடிக்கப்பட்ட ஒரு சேலையைப் பிடித்துக் கொண்டு நிற்பர். அச்சிறுமி அந்தத் துணியைப் பிடித்துக் கொள்வாள். அவளுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் நட்டுவனார், அவளுடைய கால்களைப் பிடித்தபடி முழங்கும் இன்னிசைக்கேற்ப மேலும் கீழும், அசைப்பார். அன்று எல்லாரும் விருந்து உண்பர்.

மாலையில் அச்சிறுமியை ஒரு மட்டக் குதிரை மேல் அமர்த்தி கோவிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு, தெய்வத்திற்கு புதிய துணி, தாலி, பூஜைப் பொருட்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். சிறுமியை கோவில் தெய்வத்தை நோக்கி அமரச் செய்து, பூஜை செய்யும் பிராமணர், அவளுக்குப் பூவும், சந்தனமும் வழங்கிய பின் தெய்வத்தின் காலடியில் வைக்கப்பட்ட தாலியை அவள் கழுத்தில் கட்டுவார்.

தாலி, தங்கத்தகடும், கறுப்பு பாசிமணிகளும் கொண்டதாக இருக்கும்.

கூடியிருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கும், பூவும் வழங்கிய பின் ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அவளை வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அதன் பின், தொடர்ந்து ஆடலும், பாடலும் கற்று வரும் அவள், திருமணம் சார்ந்த ஒரு சடங்கைச் செய்து கொள்வாள்.

நல்லதொரு நாளில் உறவினர்களை அழைத்து அப்பெண்ணின் தாய் மாமனோ, அவன் சார்பில் ஒருவனோ பெண்ணின் நெற்றியில் தங்கத் தகடு ஒன்றை அணிவிப்பான். அதன் பின் அவன் அவளைத் துõக்கிச் சென்று கூடியுள்ள விருந்தினர் முன் ஒரு பலகை மீது அமர்த்துவான். பிராமணப் புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதிப் புனித நெருப்பை மூட்டுவார். பெண்ணின் தாயார், பெண்ணின் மாமனுக்குப் புதிய உடைகளை வழங்குவாள். அந்தப் பெண்ணோடு அன்று உடலுறவு கொள்ள செல்வந்தனான ஒரு பிராமணனோ, அது இயலாதாயின், வசதியற்ற ஒரு பிராமணனோ ஏற்பாடு செய்யப்படுவர்.

கோவிலுள்ள தெய்வத்திற்கு அடுத்தபடியாக அதனுடைய பிரதிநிதியாக பிராமணன் இருப்பதாலேயே அவனை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு தாசி இறப்பாளானால், கோவிலில் உள்ள சிலை மீதிருந்து கொண்டு வரப்பட்ட புதுச்சேலையை அவளுக்குப் போர்த்துவர். அவள் சேர்ந்துள்ள கோவிலிருந்து அவளுடைய பிணத்திற்கு மலர்கள் அனுப்பப்படுவதோடு கூட, அவளுடைய உடல் அடக்கம் செய்யப்படும் வரை அந்தக் கோவிலில் பூஜையும் நடத்த மாட்டார்கள். கோவிலில் உள்ள தெய்வம் அவளுடைய கணவனாகப் பாவிக்கப்படுவதால் அதுவும் தீட்டிற்கு ஆட்பட்டதாகக் கருதுவதே காரணமாம்...

— இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களை சட்டம் போட்டுத் தடுத்தவர்களை மனதினுள்ளே என்றென்றும் நாம் மறக்கக் கூடாது!

நன்றி தினமலர்

முட்டாள்தின வாழ்த்துக்கள்

முட்டாள்தினம்
ஜூன் 15
தமிழனுக்கு மட்டும்

பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்

பெரியார் திரைப்படம் சில சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது .. பெரியார் படம் வருவேண்டிய ஒன்றுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 'பாரதி' படத்தை இயக்கியவரே இதனையும் இயக்குகிறார் . அப்போது கூட சில சர்ச்சைகள்.. பாரதியில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரிக்கப்பட்டண, அழுத்தமாக இல்லை என ஆங்காங்கே சில கண்டங்கள் எழுந்தன..

ஆனால் பெரியார் திரைப்படத்தில் , திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடந்த சில சம்பவங்கள் , முக்கியமாக முதல்வர் கருணாநிதிக்கு சாதகமாக , அமைந்துள்ளது என்றும் , திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதாவின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும்., ஏன் , பெரியாரின் முதல் மனைவி, மக்கள் ஆகியோரை இருட்டடிப்பு செய்துள்ளதாகவுமே பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன . வரலாற்று நாயகர்களின் திரைப்படத்தை எடுக்கும் சூழலில் , பார்க்கப்போகும் மக்களுக்கு போர் அடிக்காமல் . வரலாற்றுக் குறிப்புகள் எல்லாவற்றையுமே பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம். இப்போதைய சூழலில் , அதிகாரத்தில் இருக்கும் பலரும் , முக்கியமாக முதல்வர் , பெரியாரோடு பழகியவர் என்பதால் , இயக்குநருக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு . மேலும் , தமிழக அரசு, இந்தப் படத்திற்கு கொடுக்கும் பணம் .... அரசாங்கம் செய்யும் எந்த உதவியும், அன்றைய முதல்வரே , தன் சட்டைப்பையிலிருந்து வழங்குவதாக அர்த்தப்படுத்தும் இந்த சூழலில் , இந்த படத்திற்கான உதவி, முதல்வர் கருணாநிதி வழங்குவதாகக் கொண்டுள்ளதால் , முதல்வரை சங்கடப்ப்டுத்தும் எந்த நிகழ்வும் பதிவு செய்யப்போவதில்லை என்பது உறுதி. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே .

ஆனால் , அரசு கொடுத்துள்ள நிதியால் பயனடையப் போகிறார்கள் யார் என்பதே என் கேள்வி . அது ஒரு முதலீடாக கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் இலாபம், தமிழக அரசுக்கு பகிர்ந்துகொடுக்கப்படுமா? இல்லையெனில் , அந்தப் பணம் படத்தயாரிப்பாளருக்கு சென்றால் , பெரியார் பெயரை சொல்லி, இன்னும் ஒருவர்/சிலர் இலாபம் பார்க்கிறார்/கள் என்பதை தவிர வேறு என்ன சாதனை? அந்த படத்திற்கு பணம் கொடுத்து என்ன பயன்.. அல்லது இந்த 95 இலட்சத்தை ஈடு செய்ய , மேலும், பலரும் இத்திரைப்படத்தை பார்க்கும் வண்ணம் திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை குறைக்கப்பட ஆவணசெய்வார்களா ?

இன்னும் ஒரு கேள்வி .. இன்றைய சூழலில் , எந்தளவு பெரியார் பெயர் தி மு க வின் வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளது என்பது தெரியவில்லை . ஆனால் , தி மு கவின் அடித்தளமாக, அவர்கள் கூறிக்கொள்ளும் பல கொள்கைகள் , பெரியாரின் கொள்கைகளே. எனவே பெரியாரின் புகழ் பரப்ப தி.மு.கவுக்கென்று ஒரு தார்மீக கடமை உண்டு . சன் தொலைக்காட்சி , ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ , தி.மு.கவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் , இந்த கேள்வி எழுகிறது .. ராசி பலன்கள் , மாந்தீரிக நாடகத்தொடர்கள் என்று வியாபார நோக்கத்திற்காக , வேட்டியென அவர்கள் உருவகப்படுத்தும் , தங்கள் கொள்கைகளை தூக்கி எறிந்துகொள்ளட்டும். ஒரு பிராயசித்தமாக, எந்த வியாபார நோக்கமின்றி , டி ஆர் பி ரேட்டிங் கவலையின்றி , பெரியார் வாழ்க்கைத் தொடர் எடுத்து சன் தொலைக்காட்சி ஒளிபரப்பலாமே!! இன்னும் பலரின் வீடுகளுக்கு பெரியார் பற்றிய செய்தி/விழிப்புணர்வு போய் சேர்ந்திருக்குமே?

அந்த 95 இலட்சத்தை , அரசு பணத்திலிருந்து இல்லாமல். தி.மு.க தன் நன்றிக்கடனாக அதன் நிதியிலிருந்து கொடுத்திருந்தால் பொறுத்தமாய் இருந்திருக்கும் . தமிழக அரசு வழங்கிய பண உதவி , தயாரிப்பாளர்/களுக்கான உதவியாக இல்லாமல் , இந்த திரைப்படத்தை பார்க்கும் எல்லோருக்குமான உதவியாக இருந்தால் நலம் .

பி.கு : பல விஷயங்கள் என் பத்திரிகைகளில் வந்த செய்தியினடிப்படையில், என் அனுமானத்தை ஒத்த கருத்துகளே. இதில் ஏதாவது, தகவல் பிழை (உதா: திமுக தான் பண உதவி தருகிறது. அரசு இல்லை போன்ற) இருந்தால், சொல்லுங்கள். மாற்றியோ/அழித்தோவிடுகிறேன் . இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் முழுதாக நம்பமுடிவதில்லை .;)

இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற

தலைப்பிலேயே இப்போதைய ஹாட் டாபிக் எல்லாமே இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இருங்க... கொஞ்சம் தலைய சொறிஞ்சுக்கிறேன் .. இதுக்கு முன்னாலே பத்தாப்பு படிக்கிறப்ப , தமிழ் ஐயா வகுப்புல சொன்ன விஷயத்தை வச்சு , இந்திய சுதந்திரம்-மகாபாரதப்போருன்னு கலந்து கட்டி அடிச்சு, கவிதைப்போட்டியில் கலந்துகிட்டேன் ..என்னோட நல்ல நேரம் .. அந்த போட்டியில் , கவிதையை 'திருத்தினவர்' அதே தமிழ் ஐயா... அவர் சொன்ன விஷயம் கவிதையில பார்க்கவும் எனக்கு முதல் மார்க் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன் .. அப்புறம் கவித கவிஜ எந்தப் பக்கமும் போறதே இல்லை ..திடீரென கல்லூரியில் படிக்கும்போது , நாமதான், இளவயசுலேயே, பரிசெல்லாம் வாங்கியிருக்கோமேன்னு கவிதைப்போட்டியில் கலந்துக்கப்போனேன் .. தலைப்புக்கொடுத்து, அரை மணிநேரமோ, ஒரு மணி நேரமோ.. மறந்துவிட்டது , இதுக்குள்ள கொடுத்த தலைப்புல கவிதை எழுதவேண்டும்.. ஒரு மண்ணும் எழுத முடியலை.. அத்த்தோட விட்டது ..

ஜடாயு பதிவுல , "நீங்கள் பிரச்சினைக்குறியதாய் சொல்லியுள்ளப் பகுதியில் எங்கே இந்திய தேசியத்துக்கு எதிராண கருத்து உள்ளது? எல்லா கட்சிகளும் பார்ப்பணீயத்தை கொள்கையாய் கொண்டுள்ளன் என்று சொல்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது . பார்ப்பணீயத்தை தாக்குவதால் உங்களுக்கு கோபம் வருவதைப் புரிந்துகொள்ளலாம். தேவையில்லாமல் இந்திய இறையாண்மை இழுத்து நீங்கள் வேஷம் போடுவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது ... 'எந்தக்கட்சியுமே சரியில்லப்பா.. எல்லோருமே கொள்ளையடிக்கிறாங்கப்பா' என்று யாராவது கூறினால், 'ஐயோ!! இவன் இந்திய தேசியத்திற்கு எதிராகப்பேசுகிறான்' என்று வீடுகட்டுவீர்கள் போலிருக்குதே . " என்று எழுதி, அப்புறம் காமெண்டு எதுவும் போடவேண்டாம் என விட்டுவிட்டேன் .. அப்புறம் இந்தக் கருத்து யாருக்கும் தெரியாமல் வீணாய் போய்விடுமே (?) என்று மிகவும் வருந்தி, சரி , குழலி ஒரு பதிவுல, இரண்டு, மூன்று பேர் பேசுவதாக (டயலாக் ஸ்டைலில்) பதிவு எழுதியிருப்பார். அதுபோல ஒரு பதிவு எழுதலாம் என்று யோசித்தால் , ஒரே ஒரு டயலாக்குக்கு மேல் யோசிக்கமுடியவில்லை .. அப்பத்தான் இந்த விபரீத ஆசை.. சரி, சொல்றதை இரண்டு , மூன்று வரியில மடிச்சு, மடிச்சு எழுதுனா, கவித, கவிஜ அப்படின்னு சொல்றாங்களே, இதையே மடிச்சு எழுதுவோம்னு , எழுதிட்ட்டேன் .. அப்படியே ஒன்னோட விட்டா எப்படி .. அப்படின்னு , தோணியதெல்லாம், மடிச்சு மடிச்சு எழுதியிருக்கேன்.. ஆச்சரியக்குறிதான் எங்கே வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு ;) ..இதுதான் கவுஜயான்னு சொல்லுங்க...இல்ல இது கவுஜ இல்லை கவுஸ அப்படின்னாலும் ஓகே.. இல்ல இந்த மாதிரியெல்லாம் இனிமே ட்ரை பண்ணாதேன்னாலும் சொல்லிடுங்க.. அப்புறம் இந்த கொடுமையை திருப்பி திருப்பி அனுபவிக்கிற கொடுமை உங்களுக்கு வந்துரும் , ஆமா சொல்லிட்டேன் .. ....பூங்கா, இந்திய தேசியம் , கிரிக்கெட் மற்றும் டாஸ்மாக் பற்றிய கவுஜைக்குப் போகலாமா?





'சோத்துக்கட்சி'
சொன்னது நான்,
தடியுடன் அவர்கள்
தேச பக்தர்களாம்!!

====================

பேச்சுரிமை
வழங்குவது இந்திய தேசியம்.
அம்மா.. தாயே..

====================




சட்டையில் ஓட்டை
நிர்வாணமானேன்
கிரிக்கெட் ரசிகன் நான் ..

====================

தேசிய விளையாட்டு,
வீதியில் மைதானம்,
வீரர்கள் நாங்கள்,
கொடும்பாவி கைகளில்.




டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை .

====================

மந்திரி மகிழ்ச்சி
கருவூலம்
கொழுத்துள்ளதாம்
மலம் தின்று ...

டாப்லெஸ் பயணம்- படங்களுடன்

சிங்கப்பூர்வாசிகளுக்கு சமீபகாலமாக இது பரிச்சயமாயிருக்கும் . முதலில் ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் கூட இப்பொது பெரியதாகக் கவனித்துப் பார்ப்பதில்லை . நானும் பலமுறை சிங்கப்பூர் முஸ்தபா செண்டர் , சிராங்கூன் சாலை மற்றும் ஒர்ச்சட் பகுதிகளில் இதை பார்ப்பதுண்டு . பொதுவாக வெள்ளைக்காரப் பயணிகளைத்தான் இதில் பார்க்கமுடியும். ஒருநாளாவது நானும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என நினைத்ததுண்டு . ஆனால் என்னவென்று தெரியவில்லை , இதில் ஒருதடவை கூட பயணிக்க நான் முயற்சி செய்யவில்லை . சிங்கப்பூர் வெயிலில் , இந்த டாப்லெஸ் பஸ்ஸில் பயணம் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம் . ஆனால், வெயில் வீணாகாமல் , கிராமத்து வீதிகளை சுற்றித் திரிந்த எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .






இந்த டாப்லெஸ் பஸ்கள், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியிலிருந்து புறப்பட்டு , ஒர்ச்சட் வழியாக குட்டி இந்தியா, சைனா டௌன் போன்ற கலாச்சார மையங்களைத் தாண்டி , செந்தோசா தீவுகளுக்கும் செல்கிறது . இதில் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் ஒருதடவை பயணச்சீட்டு வாங்கினால், பயணவழிகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி , எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம் . வெயிலை, மழையை அனுபவிப்பவர்கள், எந்த இடையூறும் இல்லாது , கட்டிடங்களையும் , இரவு நேர முக்கியமாக தீபாவளி காலத்தில் குட்டி இந்தியாவிலும் , கிறிஸ்துமஸ் காலங்களில் ஒர்ச்சட் சாலையிலும் கலக்கும் வண்ண விளக்குக்காட்சிகளை படம் பிடிக்கவிரும்புவோருக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும் .



இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் : ஒருநாளுக்கு - S$23 . இருநாட்களுக்கு - S$33 .



படகு என MPA (Maritime Port and Authority)யாலும், பேருந்து என LTA(Land Tranport Authority)யாலும் அழைக்கப்படும் இந்த வாகணம் , வாத்து/DUCK என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது . சிங்கப்பூர் சாலைகளை சுற்றும் இந்த வாத்து வாகணம் , அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல, கடலிலும் பயணம் செய்யும் . இது ஒருமணிநேரப் பயணம்தான் . பயணச்சீட்டு அதே சன் டெக் சிட்டியில் கிடைக்கும் . கட்டணம் : S$33 .




இது ஏப்ரல் மாதமாகினும், பொறுமையாக இந்த கடைசிப்பத்தி வரையிலும் வாசித்து வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை .. காதைக் கொடுங்கள் ..ஸ்டார் க்ரூஸ்ஸில் டான்ஸ் இருக்காம் ..

லூசு மக்கா..

பேராசிரியர்கள் , அறிவியல் வல்லுநர்கள் , கணிணிப்பொறியாளர்கள் , பெரிய படிப்பாளிகள், கவிஞர்கள் எல்லோரும் , தமிழ் ஆர்வத்தினாலோ, நல்ல சிந்தனைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்திலோ , நண்பர்கள் வட்டத்தை பெருக்கும் , நோக்கிலோ அல்லது நேரத்தை நல்லவிதமாக் செலவிடவேண்டுமென்ற நோக்கிலோதான் பதிவிடிகிறார்கள் என எண்ணியிருந்தேன். இங்கு இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்தது தவறானது என்று சில வாரமாய் தமிழ்மணத்தில் உலவும்போது அறிந்து கொண்டேன் . இங்கே இருப்பவர்கள் எல்லோருமே லூசு மக்கா என்று இப்போதுதான் தெரிகிறது . கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியவர்களெல்லாம் , இங்கே பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது .. இதற்கு ஆதாரமாய் நான் தொகுத்துள்ளதைப்பாருங்கள் . யாராவது நான் சொல்வதை ஆட்சேபிக்க முடியுமா என்ன?

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் என தலைப்பிலேயே பெருமிதப்படுகிறார் ஒருவர் . பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன் என்கிறார் மற்றொருவர்( Bluecross-Note this point) . செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவாராம் , கணினியை அடிப்பாராம் ஒருவர் (கணினி, செடி கொடிக்கெல்லாம் ஒரு cross-ம் கிடையாதா என்ன?) . Sprite-ல உப்பு போட்டு , கோக்குல பெப்பர் போட்டு சாப்பிடும் ஒருவர் , சாம்பல் சாப்பிடும் ஒருவர் , தோசை சாப்பிடும்போது ஏதோ ஒரு ஃபீலிங்குக்காக ஏங்குபவர் என எத்தனை குணாதிசயங்கள் .

ஆனால் மக்கா, இதற்கும் முன்னால எத்தனையோ தொடர்கள் வந்திருக்கின்றன் . புத்தகத்தொடர் , சுடர் , பார்த்தது..கேட்டது .. என வந்த தொடர்கள் எல்லாமும் 'அறிவு' சார்ந்து இருந்தன. ஆனால் ஒவ்வொருவருக்குமுள்ள குழந்தைத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த விளையாட்டுதான் வழிகாட்டியது . நான் அறிந்த வரையில் சீரியஸாக எழுதும் முத்துக்குமரன் , SK, மா.சிவக்குமார் , ஜி.ராகவன், மிதக்கும் வெளி போன்றோரும் குழந்தையாய் மாறி தங்களுடைய கிறுக்குத்தனங்களை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாய் இருந்தது . இவர்களே அடித்து ஆடும் போது கொலவெறி கும்பல் சும்மாயிருக்குமா .. தம்பி , வெட்டி ,செந்தழல் ரவி, கொத்ஸ் , அபி அப்பா, கண்மணி இவர்களெல்லாம் பெர்முடா கண்ட ஷேவாக் போல அடித்து ஆடி ரணகளமாக்கிவிட்டனர் . ஜோ பதிவில் சாணான் என்பவர் சொன்னது போல மாமா, மச்சான் என ஒரு உறவுக்கூட்டத்தில் இருப்பதுபோல இப்போது இருக்கிறது .. இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவானுக்கு நன்னி .. எப்படியோ இப்போதெல்லாம் தமிழ்மணம் கொஞ்சம் குளிராக;) இருக்கிறது .

மதுமிதா , மணிமலர் போன்று பலர் என்னை இந்த ஆட்டையில் கலந்துகொள்ள கூப்பிட்டுயிருந்தாலும் , கூகுள் மேல் இரக்கம் வைத்து, I am the escape .

இங்கே பாருங்கப்பா லூசு மக்கா..................

விடியற வரை சுடுகாட்டுல ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். (தம்பி)

பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)

பிராண்டி வைச்சுடுவேன். (நாகை சிவா)

குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும் . (மணிகண்டன்)

திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)

குண்டக்க மண்டக்கன்னு பேசுவது. (உஷா)

தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்? (துளசி)

பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)

அழுகை வந்தாலும் சிரிக்கின்றேன்,கோபம் வந்தாலும் சிரிக்கின்றேன. (துர்கா)

எதை உடைப்பேன் என்று எனக்கே தெரியாது . (துர்கா)

தேவை இல்லமால் சண்டை போடுவேன். (துர்கா)

செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)

எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)

என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர். (டோண்டு)

எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவது(டோண்டு)

கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன்.(முத்துலெட்சுமி)

சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன்.(சிறில் அலெக்ஸ்)

அன்னியன் அம்பி பாணியில் மனதுக்குள் புலம்புவதும், வெளிப்படையாக பேசுவதும் நடந்து வருகிறது. (மா.சிவக்குமார்)

இன்னிக்கு ஒண்ணு பேசுவேன். நாளைக்கு அதே விஷயத்த பத்தி வேற மாதிரி சொல்வேன (ரஷ்யா இராமநாதன்)

என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)

எனக்கு கோவிலில் யாருமே இருந்தா பிடிக்காது நான் மட்டும் தான் இருக்கனும . (வெட்டிப்பயல்)

யார் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ,அடம்பிடிப்பேன் மண்ணுல புரண்டு உருளுவேன. (ஜி.ராகவன்)

தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)

வேணுக்குன்னே திருட்டு முழி முழிக்கிறது . (கார்த்திக் பிரபு)

இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். (அபிஅப்பா)

சம்பந்தமில்லாத நாட்டிலிருந்து கொண்டு சம்பந்தமில்லாமால் யோசனை செய்வது . (சின்னக்குட்டி)

இப்பவும் நல்லா உளருவேன் (அவந்திகா)

பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன் (ஜி)

ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)

ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் .(ஜோ)

பாடலை கேட்டால் குலை நடுங்கும். (கானா பிரபா)

சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும் . (கண்மணி)

நள்ளிரவில் விழித்துக் கொண்டு வேண்டாத கேள்விகளில் உழலும்(மதுமிதா)

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.(மலைநாடான்)

விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. .(மணிமலர்)

நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம். (மங்கை)

வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)

இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)

ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி படிப்பேன். (இராம்)

நான் இந்த feeling எப்படா வரும் அப்படின்னு ஒக்காந்துகிட்டு இருப்பேன். (சந்தோஷ்)

காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன். (செல்லி)

spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். (சர்வேசன்)

தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் போட்டா கூட சப்-டைட்டில் தான் படிப்பேன். படம் பார்க்க மாட்டேன்.(Fast Bowler )

இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)

ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும்.(கொத்ஸ்)

கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.(நந்தா)

கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது (திரு)

யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன்.(பீம்பாய்-ஈரோடு)

மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்.(அய்யணார்)

மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)

தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.(ஜோசப்)

ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும. (மனதின் ஒசை)

சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)

ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. (யோகன் பாரிஸ்) :)

எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன். (பொன்ஸ்)

பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். (பொன்ஸ்)


பயணிகளை இறக்கி விட்டுட்டு ஷெட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழிச்சி கிளீனர் பையன் வந்து எழுப்பி டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போனான்.(நாமக்கல் சிபி)

ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். (நடைவண்டி)

சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. (ஆழியூரான்)

கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும்.(நெல்லை சிவா)

ஓனான் புடிச்சி அத‌ பீடி புடிக்க‌ வெச்ச‌து .(மாறன்)

நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன். (துளசி கோபால்)

பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன.(கப்பிப்பய)

கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.(கப்பிப்பய)

சாகப்போறனு சொல்லி ஃபிரெண்டுக்கு போன் பண்ணி என் இண்டர்நெர் பாஸ் வேர்ட், பேங் அக்கவுண்ட் பாஸ் வேர்ட் எல்லாம் கொடுத்து வீட்டுக்கு சொல்லிட சொல்லுவேன். அப்பறம் என்னடா இன்னும் சாகலையேனு யோசிப்பேன்.(வெட்டி)

பி.கு : இன்னும் பலரின் கிறுக்குத்தனங்கள் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டன. வலைதேடி பிடித்ததும் இணைத்துக்கொள்ளுகிறேன்.


எச்சரிக்கை :

யாராவது சாப்பிடும்போது புத்தகம் படிக்கவில்லையென்றால், அதை லிஸ்டில் சேர்க்கலாம்.
சாப்பிட்டுகொண்டே படிப்பது நார்மலான விஷயமாகத்தான் தெரிகிறது. அதை லிஸ்டில் சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.

ஒரே ஊரிலிருந்து , ஒரு ஹீரோ .. ஒரு வில்லன்...

கர்நாடக மாநிலத்திலிருந்து ஒருவரை அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் வில்லனாக . அவரின் கண்ணில் ஒரு ஒளி தெரிந்ததாம், அந்த ஒளியைப்பார்த்து, அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினாராம் . இது அவர் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்தவுடன் வந்த ஜல்லி . ஒளியும் ஒலியும் அவர் கண்ணில் தெரிந்திருந்தால் அவரை ஏன் வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும்? . இதிலெல்லாம் இங்கே எந்த பிரச்சினையில்லை . ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துவிடுவது தமிழ் சினிமாத்துறையில் புதியதா என்ன ? நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் ? ரஜினி அய்யாதான்.. வேறு யார் ?

அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, உச்சத்தில் இருந்த பாலச்சந்தர் தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளித்தார் . ரஜினிக்கு பாலச்சந்தரிடமிருந்து மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பாரதிராஜா , மகேந்திரன் போன்றவர்களின் மூலம் பதினாறு வயதினிலே , முள்ளும் மலரும் போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன . சரியாகவே அவரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் . தொடர்ந்து , தன்னுடைய வித்தியாசமான நடை , பேச்சு போன்றவற்றின் மூலம் கதாநாயகனாகி , உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றார் .

ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு , ஒரு படத்திற்கு இன்னொருவரை அதே கர்நாடகத்திலிருந்து ,அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் , இவரையும் வில்லனாக . இந்த வில்லன் அறிமுகமான படம் ஒரு தோல்விப்படம். இவர் ...பிரகாஷ்ராஜ் . ரஜினிக்கு பாலச்சந்திரடமிருந்து கிடைத்த வாய்ப்புகள், ஆதரவுகள், இந்த பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கவில்லை . பாலச்சந்தருக்கே ஆதரவு தேவைப்பட்ட நேரமது . பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராய் இருந்த வசந்த்தின் 'ஆசை' இவருக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது . அதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தாலும், ரஜினிகாந்த்க்கு வந்த வெற்றிகளோ , புகழோ இவருக்கு கிடைக்கவில்லை . ரஜினி அளவுக்கு இவருக்கு திறமையில்லை என்றாலும் ஒத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையுமில்லை .

ரஜினி , தன் புகழுக்குக் காரணம் இந்த தமிழ் மண்தான் , தமிழர்கள் தான் என அடிக்கடி தன் பாடல்களில் பாடுவதும், வசனங்களில் சேர்ப்பதையும் தன் பழக்கமாக கொண்டிருக்கிறார் . ஆனால் , தமிழன் தன் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்பதாகவும் படமுடுத்து ரசித்துக் கொண்டுமிருக்கிறார் . சரி, படத்தில் வருவதெல்லாம் கற்பனை , இயக்குநர், பாடலாசிரியர்களின் கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் , இங்கே , உச்ச நட்சத்திரங்களின் விருப்பமின்றி , அணுவும் அசைவதில்லை என்பது நிதர்சனமாயிருந்தாலும் . நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது ? திருமண மண்டபம் தமிழர்க்கு அர்ப்பணம் என்ற கண்துடைப்பு, காவிரி போராட்டத்திற்கு ' உண்ணாவிரதம் ' என்ற பெயரில் திசைதிருப்பல் . யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல கங்கை-காவிரி இணைப்புக்கு 1 கோடி மற்றும் வாய்ஸ் எனத் தமிழர்க்கு நன்றிக்கடன் செலுத்துவது போல , தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு போராட்டம் நடத்திவருகிறார் .

ரஜினி அய்யா!! நீங்கள் நன்றிக் கடன் என்று ஏதாவது செய்ய வேண்டுமென்றால் , அது தமிழர்க்கு செய்யவேண்டியது ஒன்றுமில்லை . தமிழன், அவன் தலைவிதி, உங்களை ரசித்தான் , காசு கொடுத்தான், அவனுக்கு பொழுதுபோக்கை வழங்கினீர்கள் . ஆனால் , நீங்கள் நன்றி கடன் செலுத்தியே ஆக வேண்டுமென்றால் , நீங்கள் செலுத்த வேண்டியது தமிழ் சினிமாவிற்குதான் .


இந்த விஷயத்தில் தான் , பிரகாஷ்ராஜ் உயர்ந்து நிற்கிறார் . நல்ல சினிமா தரவேண்டும் என்ற அவரின் ஆசைக்கு ஒரு சல்யூட் . நல்ல கதைகளை, நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் . சிலமுறை 'பொய்' , 'நாம்' போன்ற அவர் தயாரித்த படங்கள் வெற்றியடையாவிடினும், சில படங்கள் நல்ல தரமானதாக அமையாவிடினும், நல்ல படங்கள் தரவேண்டும் என்ற அவரின் நோக்கம் உயர்ந்தது . 'மொழி' , 'அழகிய தீயே' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததும் அவரின் ஆர்வத்தை மேலும் உயர்த்தும் என்று நம்புகிறேன். தமிழ் சினிமா அவராலும் , அவர் தமிழ் சினிமாவாலும் வளர , தமிழ் திரைப்பட ரசிகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் .

ஆனால், ரஜினி அய்யா அவர்கள் , தமிழ் சினிமாவை குப்பையில் சேர்க்க இன்னும் பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார் . தன் வயதிற்கேற்றவாறு நடிக்கவோ , நல்ல படங்களைத் தயாரிக்கவோ இன்னும் இவர் மனம் ஒப்பவில்லை. அதே குப்பை மசாலாக்களை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இன்னும் நடித்து கொண்டுதான் இருக்கிறார் . தமிழ் சினிமாவில் மசாலாவுக்கு குறைச்சலா என்ன? இவரின் ஒவ்வொரு அசைவையும் காப்பி அடிக்கும் தளபதிகளும் , மாப்பிளைகளும் , லிட்டில் ஸ்டார்களும் அதை பார்த்துக் கொள்ளட்டுமே . அதை அந்த ரசிகர்கள் பார்த்து விசிலடித்துக்கொள்ளட்டுமே !! ஆனால் அந்த விசிலடிக்கும் கூட்டம் நிரந்தரமாக தன்னிடமே இருக்கவேண்டுமென்ற போராட்டம்தானே இந்த மசாலாக்களும் வாய்ஸ்களும் . இதில் எங்கே நன்றி கடன்கள் ?

ரஜினி அய்யா நடித்ததில் ஒரளவுக்கேனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் 'சந்திரமுகி ' .. அய்யாவின் குழப்பமான ஆண்மீகத்தைத் திணிக்க எத்தளித்த சில தருணங்களைத் தவிர கடைசிக்காட்சிகள் மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் தான் இருந்தன.. ஆனால் அந்தப் படத்தின் இறுதிக்காட்சிகளைத் தவிர்த்த மற்ற காட்சிகள் ??? . ரஜினி என்ற இளைஞருக்காகத் திணித்த காட்சிகள் எவ்வளவு தூரம் தரமானதாக இருந்தன ? விளக்குக்கம்பை பார்த்தால் , நாய் தான் காலைத்தூக்கும் என்பார்கள்!! இங்கே , அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் 'உலகப்புகழ்' பெற்ற மருத்துவர் காலைத்தூக்கி அறிமுகமானது எவ்வளவு தூரம் கதைக்கு அவசியமானதாய் இருந்தது . உலகப்புகழ் பெற்ற மருத்துவர் எனும்போது , ஐம்பது வயதினை ஒத்தவர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்குமே , கதையையும் அது பாதிக்கப்போவதில்லையே , கல்யாணம் ஆகாத ஒருவராக , கதைக்குத்தேவையில்லாத, அய்யாவோடு இணைந்த காதல் டூயட்டுகள் எதற்காக? காதல் காட்சிகள் திரைப்படக் கட்டாயம் என்றாலும் , அதை ஜோதிகா , அவரின் கணவனாக நடிக்கும் ஒரு இளமையான சூர்யாவோ அல்லது யாரோவை வைத்து காதல் டூயட் இருந்தால் , ரசிகர்கள் பார்க்கமாட்டார்களா என்ன?

கழிவுகளுக்கு தங்க கிரீடம் வைக்கும் ஷங்கர் போன்றவர்களின் இயக்கத்தில் நடிப்பதை தவிர்த்து ,மனித உணர்வுகளைப் பதியும் சேரன் போன்றவர்களின் படங்களில் , உதாரணமாக 'தவமாய் தவமிருந்து'வில் ,சேட்டைகளை தூர எறிந்துவிட்டு, ராஜ் கிரண் வேடத்தில், ரஜினி நடித்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய கைமாறாய் இருந்திருக்குமே!! ஒரு சிறந்த நடிகர் , தமிழ் சினிமாவில் உயர்வான இடத்தில் இருக்கும் ஒருவர் , மண்ணின் மனத்தை, மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்தின் நடிப்பதின் மூலம், தமிழ் சினிமாவின் தரம் உயருமே என்ற ஆதங்கத்தில் , ஒரு தமிழ் சினிமா ரசிகனாகவே இதை எழுதுகிறேன் . தரமான தமிழ் படம் கொடுப்பதற்கான தார்மீக கடமையும் , அதற்கான திறமையும் ரஜினியிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன் . ஆனால் , அதற்கான மனம் தான் அவரிடம் இல்லை ..

இன்னும் வரவிருக்கும் சிவாஜி என்ற படத்திலிருக்கும் ஸ்டில்களைப் பார்த்தாலும் , தம் வயதினை ஒத்த, மசாலா இல்லாத படத்தினைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வரவில்லை . சரி , அவர் சம்பாரிப்பதையோ , சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்யும் முறையையோ குறை சொல்ல நமக்கு உரிமையில்லை . ஆனால், தமிழனுக்கு 'வாய்ஸ்' கொடுப்பதை , தமிழனுக்கு நன்றிக்கடனாக 'முதல்வராக' வரும் முயற்சியையும் நிறுத்திக்கொள்ளட்டும் . அல்லது நிறுத்திக்கொண்டதை தொடரட்டும். தமிழனுக்கு ஒரு குறையென்றால், அவனை ஆண்டவனாலும் காப்பற்ற முடியவில்லையென்றாலும் , அதை பார்த்துக்கொள்ள தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு கடமையும் உள்ளது .