Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை

சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .

ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .

கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..

ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .

ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .



இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது