சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .
ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .
கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..
ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .
ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .
இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை
Posted by
-L-L-D-a-s-u
at
20
comments
Labels: அனுபவம்
Subscribe to:
Posts (Atom)