பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்

பெரியார் திரைப்படம் சில சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது .. பெரியார் படம் வருவேண்டிய ஒன்றுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 'பாரதி' படத்தை இயக்கியவரே இதனையும் இயக்குகிறார் . அப்போது கூட சில சர்ச்சைகள்.. பாரதியில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரிக்கப்பட்டண, அழுத்தமாக இல்லை என ஆங்காங்கே சில கண்டங்கள் எழுந்தன..

ஆனால் பெரியார் திரைப்படத்தில் , திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடந்த சில சம்பவங்கள் , முக்கியமாக முதல்வர் கருணாநிதிக்கு சாதகமாக , அமைந்துள்ளது என்றும் , திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதாவின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும்., ஏன் , பெரியாரின் முதல் மனைவி, மக்கள் ஆகியோரை இருட்டடிப்பு செய்துள்ளதாகவுமே பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன . வரலாற்று நாயகர்களின் திரைப்படத்தை எடுக்கும் சூழலில் , பார்க்கப்போகும் மக்களுக்கு போர் அடிக்காமல் . வரலாற்றுக் குறிப்புகள் எல்லாவற்றையுமே பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம். இப்போதைய சூழலில் , அதிகாரத்தில் இருக்கும் பலரும் , முக்கியமாக முதல்வர் , பெரியாரோடு பழகியவர் என்பதால் , இயக்குநருக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு . மேலும் , தமிழக அரசு, இந்தப் படத்திற்கு கொடுக்கும் பணம் .... அரசாங்கம் செய்யும் எந்த உதவியும், அன்றைய முதல்வரே , தன் சட்டைப்பையிலிருந்து வழங்குவதாக அர்த்தப்படுத்தும் இந்த சூழலில் , இந்த படத்திற்கான உதவி, முதல்வர் கருணாநிதி வழங்குவதாகக் கொண்டுள்ளதால் , முதல்வரை சங்கடப்ப்டுத்தும் எந்த நிகழ்வும் பதிவு செய்யப்போவதில்லை என்பது உறுதி. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே .

ஆனால் , அரசு கொடுத்துள்ள நிதியால் பயனடையப் போகிறார்கள் யார் என்பதே என் கேள்வி . அது ஒரு முதலீடாக கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் இலாபம், தமிழக அரசுக்கு பகிர்ந்துகொடுக்கப்படுமா? இல்லையெனில் , அந்தப் பணம் படத்தயாரிப்பாளருக்கு சென்றால் , பெரியார் பெயரை சொல்லி, இன்னும் ஒருவர்/சிலர் இலாபம் பார்க்கிறார்/கள் என்பதை தவிர வேறு என்ன சாதனை? அந்த படத்திற்கு பணம் கொடுத்து என்ன பயன்.. அல்லது இந்த 95 இலட்சத்தை ஈடு செய்ய , மேலும், பலரும் இத்திரைப்படத்தை பார்க்கும் வண்ணம் திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை குறைக்கப்பட ஆவணசெய்வார்களா ?

இன்னும் ஒரு கேள்வி .. இன்றைய சூழலில் , எந்தளவு பெரியார் பெயர் தி மு க வின் வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளது என்பது தெரியவில்லை . ஆனால் , தி மு கவின் அடித்தளமாக, அவர்கள் கூறிக்கொள்ளும் பல கொள்கைகள் , பெரியாரின் கொள்கைகளே. எனவே பெரியாரின் புகழ் பரப்ப தி.மு.கவுக்கென்று ஒரு தார்மீக கடமை உண்டு . சன் தொலைக்காட்சி , ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ , தி.மு.கவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் , இந்த கேள்வி எழுகிறது .. ராசி பலன்கள் , மாந்தீரிக நாடகத்தொடர்கள் என்று வியாபார நோக்கத்திற்காக , வேட்டியென அவர்கள் உருவகப்படுத்தும் , தங்கள் கொள்கைகளை தூக்கி எறிந்துகொள்ளட்டும். ஒரு பிராயசித்தமாக, எந்த வியாபார நோக்கமின்றி , டி ஆர் பி ரேட்டிங் கவலையின்றி , பெரியார் வாழ்க்கைத் தொடர் எடுத்து சன் தொலைக்காட்சி ஒளிபரப்பலாமே!! இன்னும் பலரின் வீடுகளுக்கு பெரியார் பற்றிய செய்தி/விழிப்புணர்வு போய் சேர்ந்திருக்குமே?

அந்த 95 இலட்சத்தை , அரசு பணத்திலிருந்து இல்லாமல். தி.மு.க தன் நன்றிக்கடனாக அதன் நிதியிலிருந்து கொடுத்திருந்தால் பொறுத்தமாய் இருந்திருக்கும் . தமிழக அரசு வழங்கிய பண உதவி , தயாரிப்பாளர்/களுக்கான உதவியாக இல்லாமல் , இந்த திரைப்படத்தை பார்க்கும் எல்லோருக்குமான உதவியாக இருந்தால் நலம் .

பி.கு : பல விஷயங்கள் என் பத்திரிகைகளில் வந்த செய்தியினடிப்படையில், என் அனுமானத்தை ஒத்த கருத்துகளே. இதில் ஏதாவது, தகவல் பிழை (உதா: திமுக தான் பண உதவி தருகிறது. அரசு இல்லை போன்ற) இருந்தால், சொல்லுங்கள். மாற்றியோ/அழித்தோவிடுகிறேன் . இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் முழுதாக நம்பமுடிவதில்லை .;)

இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற

தலைப்பிலேயே இப்போதைய ஹாட் டாபிக் எல்லாமே இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இருங்க... கொஞ்சம் தலைய சொறிஞ்சுக்கிறேன் .. இதுக்கு முன்னாலே பத்தாப்பு படிக்கிறப்ப , தமிழ் ஐயா வகுப்புல சொன்ன விஷயத்தை வச்சு , இந்திய சுதந்திரம்-மகாபாரதப்போருன்னு கலந்து கட்டி அடிச்சு, கவிதைப்போட்டியில் கலந்துகிட்டேன் ..என்னோட நல்ல நேரம் .. அந்த போட்டியில் , கவிதையை 'திருத்தினவர்' அதே தமிழ் ஐயா... அவர் சொன்ன விஷயம் கவிதையில பார்க்கவும் எனக்கு முதல் மார்க் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன் .. அப்புறம் கவித கவிஜ எந்தப் பக்கமும் போறதே இல்லை ..திடீரென கல்லூரியில் படிக்கும்போது , நாமதான், இளவயசுலேயே, பரிசெல்லாம் வாங்கியிருக்கோமேன்னு கவிதைப்போட்டியில் கலந்துக்கப்போனேன் .. தலைப்புக்கொடுத்து, அரை மணிநேரமோ, ஒரு மணி நேரமோ.. மறந்துவிட்டது , இதுக்குள்ள கொடுத்த தலைப்புல கவிதை எழுதவேண்டும்.. ஒரு மண்ணும் எழுத முடியலை.. அத்த்தோட விட்டது ..

ஜடாயு பதிவுல , "நீங்கள் பிரச்சினைக்குறியதாய் சொல்லியுள்ளப் பகுதியில் எங்கே இந்திய தேசியத்துக்கு எதிராண கருத்து உள்ளது? எல்லா கட்சிகளும் பார்ப்பணீயத்தை கொள்கையாய் கொண்டுள்ளன் என்று சொல்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது . பார்ப்பணீயத்தை தாக்குவதால் உங்களுக்கு கோபம் வருவதைப் புரிந்துகொள்ளலாம். தேவையில்லாமல் இந்திய இறையாண்மை இழுத்து நீங்கள் வேஷம் போடுவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது ... 'எந்தக்கட்சியுமே சரியில்லப்பா.. எல்லோருமே கொள்ளையடிக்கிறாங்கப்பா' என்று யாராவது கூறினால், 'ஐயோ!! இவன் இந்திய தேசியத்திற்கு எதிராகப்பேசுகிறான்' என்று வீடுகட்டுவீர்கள் போலிருக்குதே . " என்று எழுதி, அப்புறம் காமெண்டு எதுவும் போடவேண்டாம் என விட்டுவிட்டேன் .. அப்புறம் இந்தக் கருத்து யாருக்கும் தெரியாமல் வீணாய் போய்விடுமே (?) என்று மிகவும் வருந்தி, சரி , குழலி ஒரு பதிவுல, இரண்டு, மூன்று பேர் பேசுவதாக (டயலாக் ஸ்டைலில்) பதிவு எழுதியிருப்பார். அதுபோல ஒரு பதிவு எழுதலாம் என்று யோசித்தால் , ஒரே ஒரு டயலாக்குக்கு மேல் யோசிக்கமுடியவில்லை .. அப்பத்தான் இந்த விபரீத ஆசை.. சரி, சொல்றதை இரண்டு , மூன்று வரியில மடிச்சு, மடிச்சு எழுதுனா, கவித, கவிஜ அப்படின்னு சொல்றாங்களே, இதையே மடிச்சு எழுதுவோம்னு , எழுதிட்ட்டேன் .. அப்படியே ஒன்னோட விட்டா எப்படி .. அப்படின்னு , தோணியதெல்லாம், மடிச்சு மடிச்சு எழுதியிருக்கேன்.. ஆச்சரியக்குறிதான் எங்கே வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு ;) ..இதுதான் கவுஜயான்னு சொல்லுங்க...இல்ல இது கவுஜ இல்லை கவுஸ அப்படின்னாலும் ஓகே.. இல்ல இந்த மாதிரியெல்லாம் இனிமே ட்ரை பண்ணாதேன்னாலும் சொல்லிடுங்க.. அப்புறம் இந்த கொடுமையை திருப்பி திருப்பி அனுபவிக்கிற கொடுமை உங்களுக்கு வந்துரும் , ஆமா சொல்லிட்டேன் .. ....பூங்கா, இந்திய தேசியம் , கிரிக்கெட் மற்றும் டாஸ்மாக் பற்றிய கவுஜைக்குப் போகலாமா?





'சோத்துக்கட்சி'
சொன்னது நான்,
தடியுடன் அவர்கள்
தேச பக்தர்களாம்!!

====================

பேச்சுரிமை
வழங்குவது இந்திய தேசியம்.
அம்மா.. தாயே..

====================




சட்டையில் ஓட்டை
நிர்வாணமானேன்
கிரிக்கெட் ரசிகன் நான் ..

====================

தேசிய விளையாட்டு,
வீதியில் மைதானம்,
வீரர்கள் நாங்கள்,
கொடும்பாவி கைகளில்.




டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை .

====================

மந்திரி மகிழ்ச்சி
கருவூலம்
கொழுத்துள்ளதாம்
மலம் தின்று ...

டாப்லெஸ் பயணம்- படங்களுடன்

சிங்கப்பூர்வாசிகளுக்கு சமீபகாலமாக இது பரிச்சயமாயிருக்கும் . முதலில் ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் கூட இப்பொது பெரியதாகக் கவனித்துப் பார்ப்பதில்லை . நானும் பலமுறை சிங்கப்பூர் முஸ்தபா செண்டர் , சிராங்கூன் சாலை மற்றும் ஒர்ச்சட் பகுதிகளில் இதை பார்ப்பதுண்டு . பொதுவாக வெள்ளைக்காரப் பயணிகளைத்தான் இதில் பார்க்கமுடியும். ஒருநாளாவது நானும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என நினைத்ததுண்டு . ஆனால் என்னவென்று தெரியவில்லை , இதில் ஒருதடவை கூட பயணிக்க நான் முயற்சி செய்யவில்லை . சிங்கப்பூர் வெயிலில் , இந்த டாப்லெஸ் பஸ்ஸில் பயணம் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம் . ஆனால், வெயில் வீணாகாமல் , கிராமத்து வீதிகளை சுற்றித் திரிந்த எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .






இந்த டாப்லெஸ் பஸ்கள், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியிலிருந்து புறப்பட்டு , ஒர்ச்சட் வழியாக குட்டி இந்தியா, சைனா டௌன் போன்ற கலாச்சார மையங்களைத் தாண்டி , செந்தோசா தீவுகளுக்கும் செல்கிறது . இதில் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் ஒருதடவை பயணச்சீட்டு வாங்கினால், பயணவழிகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி , எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம் . வெயிலை, மழையை அனுபவிப்பவர்கள், எந்த இடையூறும் இல்லாது , கட்டிடங்களையும் , இரவு நேர முக்கியமாக தீபாவளி காலத்தில் குட்டி இந்தியாவிலும் , கிறிஸ்துமஸ் காலங்களில் ஒர்ச்சட் சாலையிலும் கலக்கும் வண்ண விளக்குக்காட்சிகளை படம் பிடிக்கவிரும்புவோருக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும் .



இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் : ஒருநாளுக்கு - S$23 . இருநாட்களுக்கு - S$33 .



படகு என MPA (Maritime Port and Authority)யாலும், பேருந்து என LTA(Land Tranport Authority)யாலும் அழைக்கப்படும் இந்த வாகணம் , வாத்து/DUCK என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது . சிங்கப்பூர் சாலைகளை சுற்றும் இந்த வாத்து வாகணம் , அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல, கடலிலும் பயணம் செய்யும் . இது ஒருமணிநேரப் பயணம்தான் . பயணச்சீட்டு அதே சன் டெக் சிட்டியில் கிடைக்கும் . கட்டணம் : S$33 .




இது ஏப்ரல் மாதமாகினும், பொறுமையாக இந்த கடைசிப்பத்தி வரையிலும் வாசித்து வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை .. காதைக் கொடுங்கள் ..ஸ்டார் க்ரூஸ்ஸில் டான்ஸ் இருக்காம் ..